இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு தூதரகமும் இல்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தியாளர்கள் சிலரிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு வெளிநாடு காரணமாகயிருக்கலாம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரங்களும் அற்றவை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு அரசியலில் வெளிநாடொன்றின் தலையீடு குறி;த்த பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க இவ்வாறான பதிவுகள் ஆதாரங்களுடன் வெளியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபாலசிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்தியமை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க பல பொது அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் முன்னைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு பொதுவேட்பாளரை நிறுத்துவதே பொருத்தமானது என்ற கருத்தை முன்வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டால் தாங்கள் தங்கள் வேட்பாளரை நிறுத்தமாட்டோம் என ஜேவிபி உட்பட பல கட்சிகள் தெரிவித்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் பல கட்சிகளின் இணக்கப்பாட்டுடனேயே மைத்திரிபால சிறிசேன தேர்தலில் நிறுத்தப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.