சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்
தொலைக்காட்சிகளில் வெளியானது போல கடத்திச் செல்லவோ, காவலில் வைக்கவோ தாங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்று சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், கோயம்புத்தூர், கவுண்டம்பாளையம் எம்எல்ஏவுமான வி.சி.ஆறுக்கட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, ”அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களை வெளியே விடுங்கள். அவர்கள் சென்று மக்களைச் சந்திக்கட்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சசிகலாவுக்கு விசுவாசமாக உள்ள எம்எல்ஏக்கள், அவர்களின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய பெருந்துறை எம்எல்ஏ என்.டி வெங்கடாசலம், ”நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.
தொலைக்காட்சிகளில் வெளியானது போல எங்களைக் காவலில் வைக்கவோ, கடத்திச் செல்லவோ நாங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை.
ஆளுநரின் அழைப்புக்குப் பிறகு எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டியிருப்பதால், அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ முருகுமாறன் பேசும்போது, ”நான் கூவத்தூர் அருகே ஒரு விடுதியில் தங்கியிருக்கிறேன். இது சொகுசு விடுதியல்ல. யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் தன்னிச்சையாகவே இயங்குகிறேன். என்னுடைய செலவுகளுக்கு என்னுடைய பணத்தையே கொடுக்கிறேன்.
எனக்கு எவ்விதமான மிரட்டலோ, கடத்தலோ, அழுத்தமோ இல்லை. இவையனைத்தும் போலி குற்றச்சாட்டுகள்” என்றார்.
கைபேசிகள் அனைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்துக் கேட்டதற்கு, தேவையில்லாத அழைப்புகளைத் தவிர்க்கவும், தவறான செய்திகள் பரப்பப்படாமல் இருக்கவும் தொலைபேசியை அணைத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் பேசும்போது, தன்னை யாரும் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்று கூறினார்.
அதிமுக எம்எல்ஏக்கள் மிரட்டப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான வளர்மதி, பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் தொலைபேசி வழியாக மிரட்டுவதாலேயே அவர்கள் தங்களின் எண்களை அணைத்து வைத்துள்ளதாகக் கூறினார்.