தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் (அமல்) மகிந்த அணிக்கு தாவியுள்ள நிலையில், அதனால் எழுந்துள்ள நெருக்கடி நிலமை மற்றும் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு எத்தகையை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று காலை மீண்டும் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்ட முடிவில் சிறப்பு ஊடக அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று மாலை சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்காத செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கட்சி தாவியமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது. மகிந்தவையா அல்லது ரணிலையா ஆதரிப்பது. இல்லாவிடின் நடுநிலமை வகிப்பதா என்பது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனால் இன்று காலை மீண்டும் கூடிப் பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் சிறப்பு ஊடக அறிக்கையும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.