எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவாரென அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூர்க்கத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு – வத்தளை பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார.
மேலும் அவர் தெரிவிக்கையில், “ஐனாதிபதி சிந்திக்காமல் ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு விதமாக பேசுகின்றார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மறந்து ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகளையே தொடர்ந்தும் செய்து வருகிறார்.
இதற்கு காரணம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவோமென அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஜனாதிபதி, ஐ.தே.க.வுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
அந்தவகையில் தற்போது அதன் விளைவு அரசியலில் பாரிய நெருக்கடியை தோற்றுவித்து நாட்டிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தில் எனக்கும் தொடர்புள்ளதாக கூறப்பட்டு வருகின்றமையை வன்மையாக கண்டிக்கின்றேன்” எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.