யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் கடந்த சில வாரங்களாக வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நவாலிப் பகுதிக்கும் அது பரவியுள்ளது.
நவாலி வடக்கு, சங்கரத்தை பிரதான வீதியில் கேணியடிப் பகுதியிலுள்ள வீட்டின் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் சரமாரியாக கற்கள் வீசப்பட்டுள்ளது.
வீட்டின் சீற் உடைந் துள்ளது. தெய்வாதீனமாக வீட்டில் உள்ளவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.
அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் வன்னியசேகரம் இது தொடர்பில் தெரிவித்ததாவது, எனது வீட்டிலிருந்து மூன்று வீடுகளுக்கு அப்பால் உள்ள சகோதரியின் வீட்டின் மீதே கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சகோதரியின் மகள் வீட்டு யன்னல் ஊடாக, மதிலின் மேலாக இனந்தெரியாத சிலர் சிவப்பு நிற வெளிச்சத்துடன் ஏறிக் குதிப்பதை அவதானித்துள்ளார்.
சிறிது நேரத்தில் வீட்டின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் சத்தமிடவே 25 மேற்பட்ட இளைஞர்கள் அங்கு திரண்டனர். தேடுதல் நடத்திய போதும் எவரும் சிக்கவில்லை.
நாளை காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர் என்றார்.