கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.
இந்நிலையில் இந்த குண்டுத் தாக்குதல்களின் பின்னர் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சாய்ந்தமருதில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது காயமடைந்த சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா ( 24) பொலிஸாரின் விசாரணைகளின் போது சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
ஈஸ்டர் தினத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் தங்கியிருந்த விடயம் வெளிவந்துள்ளது.
குறித்த கடைத்தொகுதியின் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாளே தங்களது தலைவர் சஹ்ரான் காஸிம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
தற்கொலை குண்டுதாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இருமாத காலத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு தொடர்மாடிக் கட்டடத்தொகுதி ஒன்றில் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தான் புனித போருக்குச் செல்லப்போவதாக கொள்ளுப்பிட்டியிலுள்ள கட்டடத்தில் ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு உணவு அருந்திய பின்னர் சஹ்ரான் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். தான் மரணமடைந்த பிறகு 4 மாதங்களுக்கு துக்கம் அனுஷ்டிக்குமாறும் அவர் மனைவியைக் கேட்டுள்ளார்.
ஆனால் தன்னை ஆரம்மலவின் கெக்குனகொல்ல பிரதேசத்திலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு அனுப்புமாறு சஹ்ரானின் மனைவி கேட்டிருக்கிறார். எனினும் சஹ்ரான் அதற்குப் பதிலளிக்கவில்லை. தன்னை விவாகரத்துச் செய்யுமாறு கூட சஹ்ரானை சாதியா பல தடவைகள் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை என்று பாத்திமா சாதியா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறன்று தாங்கள் சாய்ந்தமருதில் உள்ள வீட்டில் இருந்ததாகவும் சாதியா மேலும் தெரிவித்தார். தங்களது குழுவினர் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக சஹ்ரானின் சகோதரி (ரில்வானின் மனைவி) அன்று காலை சாதியாவிடம் கூறியிருக்கிறார்.
எதற்கும் பயப்பட வேண்டாம். உங்களைப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்று சஹ்ரானின் தாயார் சாதியாவிடம் கூறியுள்ளதாகவும் பாத்திமா சாதியாவிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.