அரச படைகளின் இனவெறித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் காவுகொள்ளப்பட்ட முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் தடயங்களை இப்போதும் காணமுடிகின்றது.
விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் காலப் பகுதியில் இராணுவத்தின் பிடியில் இருந்து தமது உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காகப் பல இடம்பெயர்வுகளைச் சந்தித்த தமிழ் மக்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதியை வந்தடைந்தனர்.
மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறிய நிலப் பரப்புக்குள் அடக்கப்பட்டவேளை இராணுவம் ஏவிய எறிகணைகளால் தினமும் வகைதொகையற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. இதன் பின்னர் மீள்குடியேற்றக் காலத்தில் தடயங்கள் இராணுவத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. ஆயினும், பல இடங்களில் மனித எலும்புகள் சிதறிக் கிடப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இனப்படுகொலையின் சாட்சியாக இன்றும் பல தடயங்களை தன்னகத்தே சுமந்துள்ளது முள்ளிவாய்க்கால்.