Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்தஷவின் தலையீடு தொடர்பில் சம்பந்தனே கூறியது

மஹிந்தஷவின் தலையீடு தொடர்பில் சம்பந்தனே கூறியது

மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது – சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பொது தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வாகும். தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறியதையடுத்து ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

இதன் நிமித்தமாகவே கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பிரதமராக நியமித்தார். எனவே பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே உள்ளது என முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் பெதுச் செயலாளருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என சம்பந்தன் பல தடவைகள் கூறி வந்துள்ளார். இதுபற்றியும் சகலரும் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்றரை வருடங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலுடன் இணைந்து செயற்பட்டவேளை நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டது மட்டுமன்றி நாட்டின் வளங்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே அவர் செயற்படுகின்றார். இதனால் மீண்டும் எமது நாடு வெளிநாடுகளுக்கு அடிப்பணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு எமது நாட்டு உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை கிடையாது. ஆனால் எமது நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உரிமை மக்களுக்கு உள்ளது. ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முன்வந்தபோது அதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றம் சென்றமை வேடிக்கையானது. சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஐக்கிய தேசிய கட்சியினரே கொண்டு வந்தார்கள்.

நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டால் அது ஜனநாயகத்தை மீறும் செயல் என ஐக்கிய தேசிய கட்சியினர் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதவொன்று.

பாராளுமன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரி கூட்டமைப்புக்கு அதிக பெரும்பாண்மை உள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு உள்ளதால் தனக்கே பெரும்பான்மை என்கிறார்.

ஆனால் கூட்டமைப்பினரோ ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கவில்லை. இந்நிலையில் எஞ்சியிருக்கும் 6 மாத கால ஆட்சியில் தீர்வு கிடைக்குமென தமிழ்தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் மீண்டுமென மக்களை ஏமாற்றுகின்றனர் என்கின்றனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என சம்பந்தன் பல தடவைகள் கூறி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே மஹிந்த தலைமையிலான ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது உறுதி. அதற்கு எமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என்றார்.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …