ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்நிலையில், அன்றைய தினத்தில் நண்பகல் 12 மணிமுதல் 2 மணிவரை நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரியே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்ததனால் யுத்தத்தின்போது சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு ஜனாதிபதியே பொறுப்பானவர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சரணடைந்த நிலையில், தற்போது யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகளை நெருங்குகின்ற போதிலும் சரணடைந்தவர்களின் நிலை மர்மமாக காணப்படுகின்றமை தொடர்பிலும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.