அதிகாரப் பகிர்வு தொடர்பான இறைமையதிகாரம் மக்களையே சாருமென குறிப்பிட்டுள்ள பிரதமரும் அரசியல் யாப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, இதுகுறித்து மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை நீக்கப்படாதென மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அதே சந்தர்ப்பத்தில் ஏனைய மதங்களின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படுமென மேலும் தெரிவித்தார்.
மேலும், உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதோடு, மக்களின் கருத்துக்களை உள்வாங்கியே சட்டமூலம் தயாரிக்கப்படும் என இதன்போது குறிப்பிட்டார்
இதேவேளை, கலப்பு தேர்தல் முறை தொடர்பாக சிறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியது அவசியமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.