Friday , March 29 2024
Home / அரசியல் / வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்தது. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முன்வந்தது. இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான பகை விலகத்தொடங்கியது.

அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவானது. இதை அமெரிக்காவும் ஆதரித்து வருகிறது.

அந்த உச்சி மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெறுகிறது. இதற்காக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் இன்று அங்கு செல்கிறார்.

கொரிய போர் முடிந்த பின்னர் (1953) வடகொரிய தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை ஆகும். அவருடன் 9 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவினரும் அங்கு செல்கின்றனர்.

முதலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

அதைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு கிம் ஜாங் அன்- மூன் ஜே இன் இடையேயான உச்சி மாநாடு தொடங்குகிறது. பன்முஞ்சோம் அமைதி இல்லத்தில் நடைபெறும் இந்த மாநாடு, இரு நாடுகள் இடையேயான கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும்.

உச்சி மாநாட்டின் முதல் அமர்வு முடிந்த உடன் இரு தரப்பினரும் தனித்தனியாக போய் மதிய உணவு சாப்பிடுவார்கள். மதியம் இரு தலைவர்களும் அமைதிக்கும், வளத்துக்கும் அடையாளமாக அங்கு பைன் மரக்கன்று ஒன்றை நடுவார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் பன்முஞ்சோம் இல்லத்துக்கு நடந்து செல்வார்கள். அடுத்த அமர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவார்கள். கூட்டாக அறிக்கையும் வெளியிடுவார்கள்.

அதைத் தொடர்ந்து தென்கொரியா சார்பில் விருந்து ஒன்றுக்கும் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் இரு நாட்டு உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன. அதைத் தொடர்ந்து ‘ஸ்பிரிங் ஆப் ஒன்’ (ஒரு வசந்தம்) என்ற வீடியோ திரையிடப்படும். அதை இரு தலைவர்களும் பார்வையிடுவார்கள். அதைத் தொடர்ந்து வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் நாடு திரும்புவார்.

உச்சி மாநாட்டின் சிறப்பு அம்சம், வடகொரியா அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்து உள்ள நிலையில் அதை இன்றைய பேச்சுவார்த்தையில் இடம்பெறச்செய்து உறுதி செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அது மட்டுமின்றி அடுத்த மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து நடத்த உள்ள பேச்சுவார்த்தைக்கு இந்த மாநாடு முன்னோட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv