உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சன்சார் சந்த். இவரது மனைவி அவினாஷ் கவுர்.
1986-ம் ஆண்டின் இந்திய வருவாய்ப் பணி (ஐ.ஆர்.எஸ்.) தொகுப்பை சேர்ந்த இவர், கான்பூரின் முதல் ஜி.எஸ்.டி. கமிஷனராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் கான்பூரில் தொழில் அதிபரிடம், அவருக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு ரூ.1½ லட்சம் லஞ்சம் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்து, இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
இந்த வழக்கில் சன்சார் சந்தும், அவரது மனைவி அவினாஷ் கவுரும் மற்றும் தொடர்பு உடைய சிலரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சன்சார் சந்த், அவினாஷ் கவுர் மற்றும் 13 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை லக்னோ சி.பி.ஐ. தனி கோர்ட்டில் தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று உள்ளவர்கள், தொழில் அதிபர்களை தொடர்பு கொண்டு மாதம் ஒரு முறை, 3 மாதங்களுக்கு ஒரு முறை என லஞ்சம் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது.