வரலாற்றுப் பெருமையும், ஆன்மீகச் சிறப்பும் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
அலங்கார கந்தன் இன்று சித்திரத் தேரில் அழகுத்திருக்கோலமாக பவனி வருகின்ற காட்சியைக் காண்பதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகைத் தந்துள்ளனர்.
அதிகாலை பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூஜைகள் முதலியன காலக் கிரமம் தவறாது நிறைவேற்றப்பட்ட பின்னர், முருகப் பெருமான் சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய திருத்தேரில் வள்ளி, தெய்வானை சமேதரராக எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்புரிகின்ற காட்சியைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்பர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் இவ்வருட மகோற்சவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று தேர்த்திருவிழா வெகுசிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெறுகின்றது. தேர்த்திருவிழா முன்னிட்டு யாழ் நகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
தேர் வீதிவலம் வந்தபின்னர் சண்முகப் பெருமானுக்குப் பச்சைச்சாத்தி, தேரிலிருந்து ஆலயத்துக்குத் திரும்புவார். பச்சை நிற ஆடைகள் அணிவித்து, பச்சை நிற அலங்காரம் செய்து, அலங்காரக் கந்தனாக வருகின்ற காட்சி பக்தர்களின் மனதை உருக்கும் அற்புதக் காட்சியாக இருக்கும்.
இன்றைய மகோற்சவ நிகழ்வுகள் ஆதவன் தொலைக்காட்சி ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.