தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினை மறக்க முடியாதென்றும், மன்னிப்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிக்க முடியுமென இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இந்த கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இனப்படுகொலை மறக்கக் கூடிய விடயம் அல்ல. வரலாற்றை மறக்காமலிருந்தாலே மீண்டும் அவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும். ஆனால், மன்னிப்பதா இல்லையா என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.