முஸ்லிம்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள எந்த முஸ்லிம் மத ஸ்தலங்களோ, கிராமங்களோ அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் அரசுக்கு பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி செயலாளர் கையொப்பமிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிப்பட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை கொண்ட ஒரு சிலர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தப்பான கருத்துக்களை பரப்பிவருவதாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகியபகுதிகள் இணைக்கப்பட்டு ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ பாதுகாக்கப்பட்ட வனம் என பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 24 ஆம் திகதி தனது ரஷ்ய பயணத்தின் போது கையொப்பமிட்டிருந்தார்.