வடக்கு கிழக்கிலுள்ள 14,769 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும், அவற்றில் 263.56 ஏக்கர் காணிகளை மாத்திரமே விடுவிக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கில் 12,200 ஏக்கர் அரச காணிகளும் 2,569 ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் வசமுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு ஆளுநரின் அறிவுறுத்தலின் பிரகாரம், எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் மேலும் 1,099 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுமென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் காட்டுப்பகுதியிலுள்ள நிலங்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும், அந்தந்த மாவட்ட செயலகங்களில் அவை கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
யுத்தம் நிறைவடைந்த கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியளவில் 84,524 ஏக்கர் நிலத்தை இராணுவம் முழுமையாக கையப்படுத்தியிருந்தது. அவற்றில் இதுவரை 69,754 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எஞ்சிய காணிகளையும் விடுவித்து அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்களும், சிவில் சமூக அமைப்பினரும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக காணி விடுவிப்பு தொடர்பாக, நில உரிமைக்கான மக்கள் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது. ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு அமைவாக, டிசம்பர் 31இற்குள் வடக்கு கிழக்கில் சகல காணிகளையும் விடுவித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களாகின்ற போதும், தமது நிலங்களை விடுவிக்காமல் வைத்திருப்பது தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ள மக்கள், தம்மை நிரந்தரமாக மீள்குடியேற்ற வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.
அதன் பிரகாரம் வடக்கு கிழக்கிலுள்ள காணிகளை முழுமையாக விடுவிக்க சம்பந்தப்பட்ட தரப்பிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளாரென கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இவ்வருடம் நிறைவடைய இன்னும் ஒருநாள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், ஜனாதிபதியின் வாக்குறுதி தொடர்பாக மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மேலும் பலரை இடம்பெயர வைத்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு, ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு அமைவாக காணிகளை விடுவித்து தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் ஒரு நாள் மாத்திரமே உள்ள நிலையில் ஜனாதிபதி தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில், நில உரிமைக்கான மக்கள் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது.
ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு அமைவாக, டிசம்பர் 31இற்குள் வடக்கு கிழக்கில் சகல காணிகளையும் விடுவித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அதில் வலியுறுத்தியிருந்தது.