எமது கோரிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷவின் பதிலையடுத்தே ஜனாதிபதி தேர்தலில் தீர்மானத்தை எடுப்போம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை அதன்பின்னரே எடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கடந்த புதன்கிழமை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக எங்களுக்கு சில விமர்சனங்கள் இருக்கின்றன. அது தொடர்பாக எமது ஜனநாயக இடதுசாரி முன்னணி அவரை கடந்த புதன் கிழமை சந்தித்து தெளிவுபடுத்தினோம்.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக சமல் ராஜபக்ஷவை நிறுத்துவதன் தேவைப்பாடு தொடர்பாகவும் அவரிடம் எடுத்துக்கூறினோம்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக எமது பக்கத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்டால் நாங்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பது என்பது தொடர்பாக எமது கட்சி தீர்மானிக்கும். அதனால்தான் முன்கூட்டியே கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக நாங்கள் தெரிவித்துவந்த விமர்சனங்கள் மற்றும் எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை குறித்த சந்திப்பின்போது அவரிடம் கையளித்தோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.