பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு
நிரந்தர காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தி, பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் ஏ9 வீதியின் அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம், தீர்வை எட்டும் நோக்குடன் இன்று 10 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது.
நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, சுதந்திர மகளிர் அமைப்பு மற்றும் சமவுரிமை இயக்கம் ஆகியன மக்களுடன் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இதேவேளை போராட்டம் இடம்பெறும் இடத்துக்குச் சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மக்களது பிரச்சனை குறித்து கேட்டறிந்துள்ளார்.
இந்நிலையில் தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்ற இலக்குடன் பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பில், மக்கள் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்தும் அரசியல்வாதிகள் எவரும் கவனம் செலுத்தாத நிலையில், பொது அமைப்புக்கள் தமக்கு ஆதரவளிப்பது சற்று நம்பிக்கையளிப்பதாக கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.