இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது குல்புதீன் ஜாதவ் மரண தண்டனை, எல்லை தாண்டிய தாக்குதல், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சாலை அமைத்தல் போன்ற விவகாரங்களில் பனிப்போர் நிலவி வருகிறது. சர்வதேச அரங்கில் மாறி மாறி இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா கட்ரஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் ,”இதை நான் தயக்கத்திற்குரிய விஷயமாக நினைக்கவில்லை. பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலமாக தீர்வுகளை கொண்டு வரலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும், “காஷ்மீர் விவகாரம் மற்றும் எல்லைப் பிரட்சனை ஆகியவற்றால் நிலவக்கூடிய பதற்றமான சூழலை பொதுச் செயலாளர் உன்னிப்புடன் கவனித்து வருகிறார். இவ்விவகாரத்தில் அவர் நேரடியாக தலையிட விரும்பவில்லை. முன்னர் கூறியதுப் போல மேற்கண்ட இரு நாடுகளும் இப்பிரட்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்” எனவும் டுஜாரிக் தெரிவித்தார்.