மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மும்பை தீவிரவாத தாக்குதலின் 9வது நினைவு தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசும்பொழுது, தீவிரவாதம் பற்றிய விவகாரத்தினை கடந்த 40 வருடங்களாக இந்தியா எழுப்பி வருகிறது என கூறினார்.
தொடக்கத்தில் இதனை உலக நாடுகள் கருத்தில் எடுத்து கொள்ளவில்லை. ஆனால், தீவிரவாத அழிப்பு நோக்கங்களை பற்றி அவை தற்பொழுது கவனத்தில் கொண்டு வருகின்றன. தீவிரவாதத்தினை ஒழிக்க உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா மகாவீர், புத்தர், குரு நானக் மற்றும் மகாத்மா காந்தி போன்றோர் வாழ்ந்த இடம். அவர்கள் அமைதி மற்றும் அகிம்சை ஆகியவற்றை போதித்து சென்றுள்ளனர். மனித இனத்தினை அழிக்கும் நரக குழியாக தீவிரவாதம் உள்ளது.
அதனால் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள மனிதர்கள் தீவிரவாதத்தினை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.