கடும்மழை பெய்துகொண்டிருக்க, வெள்ளத்துடன் அள்ளுண்டு செல்லும் அபாயத்துக்கு மத்தியில் முத்தை யன்கட்டு காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட மந்திரவாதி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
உயிராபத்தை எதிர்கொண்ட நிலையிலும் பாதுகாப்பைத் தேடாது தொடர்ந்தும் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர்களை சிரமத்தின் மத்தியில் கயிறு கட்டி வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய பின்னர் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டப் பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி ஆலோசனையில் இயங்கிவரும் பொலிஸ் சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் அவர்களைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.
அவர்களில் ஒருவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் புதையல் இருக்கும் இடத்தை சரியாக அடையாளம் கண்டு புதையலை மீட்கும் மந்திரவாதி என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அவரிடமிருந்து மந்திரச் சுவடிகள், தங்கம் உரசிப் பார்க்கும் கற்கள், தங்கம் தூய்மையாக்கும் இரசாயன மருந்துகள் மற்றும் திசையறிகருவி என்பனவற்றை மீட்டதாகத் தெரிவித்தனர்.