தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தொடர்பிலான பல கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் சொத்து மதிப்பு என்ன? என அவரது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் ரொம்பவும் பரிதாபப்படுகிறார்கள். ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அவரது சொத்து மதிப்பு என்ன? அவரது மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன? எனவும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேலும், காமராஜ் இறக்கும் போது அவரிடம் ஒன்றும் இல்லை. என்ன ஒரு வேறுபாடு எனவும் கேலி செய்யும் தொனியில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சமூக வலைத்தளங்களில் மார்கண்டேய கட்ஜு வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ஜெயலலிதா பெண் சிங்கம் போன்றவர் , தடைகளை தகர்த்து அவர் மீண்டு வருவார் எனவும் கட்ஜு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது கருணாநிதி பற்றிய அவரது கருத்து மற்றும் ஜெயலலிதா பற்றிய கட்ஜுவின் முந்தைய கருத்து ஆகியவற்றை முன்வைத்து, சமூக வலைதளங்களில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.