மஹிந்தவின் நிலைப்பாட்டிலேயே மைத்திரி
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல் தொடர்பில் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று மஹிந்த ராஜபக்ச கூறியிருந்த நிலையில், தற்போது இராணுவத்தை விசாரணை செய்ய விடமாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவதாகவும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல்வேறு விடயங்களில் ஆதரவு வழங்கியுள்ளதாகவும், எனினும் அரசாங்கம் எதனையும் பூரணமாகச் செய்து முடிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவைக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்வதாகவும் தற்போது கடுமையான நிபந்தனையின் கீழ், இரண்டு வருடம் கால நீடிப்புக்கொடுக்க சர்வதேச சமூகம் இடமளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கால நீடிப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எவ்வாறு சாதகமாக இருக்க போகின்றது என்பதை தாங்கள் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் நிலையை முற்றாக உணரவில்லை என்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதாகக் குறிப்பிட்ட அவர்,
தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மதுபான தொழிற்சாலைகளை அமைப்பதற்கு நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன்,
நாட்டில் மதுபாவனையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.