இராணுவத்தினர் தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்படுவர்: சந்திரிகா
போரின்போது குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு மிகவிரைவில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உறுதியளித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அலுவலகம் இந்த வருட இறுதிக்குள் செயல்பட ஆரம்பித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன், சர்வ மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
“பலதரப்பட்ட அடிகளைப் பெற்ற தமிழ் மக்களுக்கு தற்போது சிங்களவர்களால் ஆட்சிசெய்யப்படும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அவர்களுக்கு இன்று இல்லை. வாக்குறுதியளிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம் என்றும் 13ஆவது திருத்தமும் போதாது, அரசியலமைப்பின் ஊடாக உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று கோருகின்றனர்.
அதனைப் பெற்றுக்கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது? இந்த வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு திட்டம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் உள்ளது. சர்வதேச ரீதியிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்பான முறையில் இந்த அலுவலகம் அமைக்கப்படுகிறது. இன்னும் சில நடவடிக்கைகளே அந்த அலுவலகத்தை மிகவிரைவில் ஆரம்பிப்பதற்காக உள்ளன. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக யார் காணாமல் போனார்கள் என்பது பற்றி அறிந்து பட்டியலை வெளியிட்டதன் பின்னர் இராணுவத்திலுள்ள அனைவரையும் போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு இழுத்துச்செல்ல அரசாங்கம் தயாராகி வருவதாக சிலர் கூறிவருகின்றனர்.
அப்படி செய்வதற்கு அவசியமில்லை. காணாமல் போனோரது பெற்றோர் இன்னும் தங்களது பிள்ளைகள் குறித்து நம்பிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ந்து சரியான ஒரு முடிவை அவர்களுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு இராணுவ முகாம்களுக்குச் சென்று ஆராய்ந்து வருவது தொடரும்.
எனவே அரசாங்கத்தினால் காணாமல் போனவர்கள் பற்றி எழுத்துமூல அறிக்கை ஒன்றை கையளித்து அடுத்ததாக அவர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அனைவரையும் போர்க் குற்ற நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது அவசியப்படாது. சர்வதேசமும் அவ்வாறு கூறவில்லை. மிகவும் கீழ்த்தரமாக குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம்” – என்றார்.