வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து இளைஞன் ஒருவரை நேற்று இரவு இராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.
வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர், ஈச்சங்குளம் இராணுவ முகாமின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி விட்டு, அதன் முன்னால் இராணுவத்தினர் நடத்தும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்.
அங்கு நின்ற சிப்பாய் ஒருவருக்கும், இளைஞனுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் ஒன்றிணைந்து தன் மீது தாக்குதல் நடத்தியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த இளைஞனைக் கைது செய்தனர்.
இராணுவத்தினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஈச்சங்குளம் பொலிஸாராலட வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.