மக்களிடம் எதிர்ப்பு அலைவீசுவதால் இடைத்தேர்தலை நடத்தினால், வெற்றி பெற இயலுமா? அ.தி.மு.க. மூத்த தலைவர்கள்
மக்களிடம் எதிர்ப்பு அலைவீசுவதால் இடைத்தேர்தலை நடத்தினால், வெற்றி பெற இயலுமா என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் யோசிக்கிறார்கள்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் 122 பேர் உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அணியில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களும் எதிராக வாக்களித்தனர். அவர்களது இந்த செயல் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொறடா ராஜேந்திரன் உத்தரவை மீறியதாகக் கருதப்படுகிறது.
சட்டசபை விதிப்படி கொறடாவின் அறிவுறுத்தலை எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் மீறக்கூடாது. மீறினால் அவர்களது எம்.எல்.ஏ. பதவியை பறிக்க முடியும்.
அதாவது தனது உத்தரவை மீறிய எம்.எல்.ஏ.க்கள் பற்றி சபாநாயகருக்கு கொறடா 15 நாட்களுக்குள் கடிதம் எழுத வேண்டும். அதில் உத்தரவு மீறலுக்காக 12 எம்.எல்.ஏ.க்கள் பதவியையும் பறிக்க கொறடா பரிந்துரைப்பார். அதை ஏற்று 12 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு விட்டு, அவர்களது எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகரால் பறிக்க முடியும்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகரும், கொறடாவும் சேர்ந்து மிக எளிதாக தகுதி நீக்கம் செய்து விட முடியும். ஓ.பன்னீர் செல்வத்தையும் அவர்களது அணியையும் பழி வாங்கவும், முடக்கவும் அதுவே சரியான சந்தர்ப்பம் என்பதால், இந்த நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மூத்த அமைச்சர்கள், கொறடா ராஜேந்திரன் ஆகியோரை தன் வீட்டுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அதில் எத்தகையை முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை.
இந்த நிலையில் 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி மிகவும் தயங்குவதாக கூறப்படுகிறது. 12 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டால் அடுத்தடுத்து புற்றீசல் போல பல்வேறு பிரச்சனைகள் வரும். தேவை இல்லாமல் ஏன் அந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.
முதலில் 12 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டால், 12 தொகுதிகளும் காலி இடமாக அறிவிக்கப்படும். அந்த 12 இடங்களுக்கும் சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இந்த இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தலைவர்களிடம் மிகவும் தயக்கம் காணப்படுகிறது.
அ.தி.மு.க. மூத்த தலைவர்களின் இந்த தயக்கத்துக்கு, மக்களிடம் காணப்படும் மனநிலையே காரணமாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொது மக்களிடம் தற்போதும் பல்வேறு விஷயங்கள் விவாதப் பொருளாக உள்ளன. ஜெயலலிதா மரணத்தில் முழுமையான உண்மை தெரியவில்லை என்ற அதிருப்தி பெரும்பாலான மக்களிடம் உள்ளது.
மேலும் சசிகலாவை மக்கள் ஏற்கவில்லை என்பது சில பத்திரிகைகள் நடத்திய கருத்து கணிப்புகளும், சமூக ஊடகங்களில் பரவிய கருத்துக்களும் உறுதிப்படுத்துவதாக உள்ளன. மக்கள் இத்தகைய மனநிலையில் இருக்கும் போது இடைத்தேர்தலை நடத்தினால், வெற்றி பெற இயலுமா என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் யோசிக்கிறார்கள்.
12 தொகுதி இடைத்தேர்தல் முடிவு, அ.தி.மு.க. மீதான இமேஜை சேதப்படுத்தி விடக்கூடும். அது தி.மு.க.வுக்கு சாதகமாகி விடுமோ என்ற தவிப்பும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் உள்ளது. எனவே 12 எம்.எல்.ஏ.க்கள் மீது பதவி பறிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு விரிவான ஆலோசனைக்கு முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே 12 எம்.எல்.ஏ.க்.கள் பதவி நீக்கம் செய்யப்படும் போது, அதை எதிர்த்து அவர்கள் கோர்ட்டு, தேர்தல் கமிஷனுக்கு செல்வார்கள். அது மேலும் சட்ட சிக்கலை உருவாக்கிவிடக் கூடும் என்று கருதப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி வகிப்பது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
சசிகலாவுக்கு எதிராக தேர்தல் கமிஷன் முடிவு எடுத்து அறிவித்தால், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அது சாதகமாக மாறும்.
இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கொறடாவாக செம்மலையை நியமித்து அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். அதற்கு உரிய அங்கீகாரம் பெற தேர்தல் கமிஷனை நாட ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இத்தகையை காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க முடியாத நிலை நிலவுகிறது.