அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி பன்னங்கண்டிக் கிராம மக்களின் போராட்டம் தொடர்கின்றது!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கோரி இன்று புதன்கிழமை 12 நாளாகவும் போராட்டம் நடத்தினர்.
“மத்திய வகுப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட குறித்த காணியில் நீண்ட காலமாக வாழ்கின்றபோதும் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. அதனால் வீட்டுத் திட்டமோ ஏனைய அரச உதவிகளையோ பெற முடியாதுள்ளது. எமது கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும்” என்று வலியுறுத்தி அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1990ஆம் ஆண்டு காணியற்ற மக்களுக்குப் பல்வேறு பகுதிகளிலும் காணிகள் வழங்கப்பட்டன. பசுபதி கமம் என அழைக்கப்படும் பகுதியில் சுமார் 65 குடும்பங்களை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட மக்களும், சரஸ்வதி கமம் என அழைக்கப்படும் பகுதியில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 400 இற்கும் மேற்பட்ட மக்களும், ஜொனி குடியிருப்பு என அழைக்கப்படும் பகுதியில் 16 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60 இற்கும் மேற்பட்டவர்களும் வாழ்கின்றனர்.